திரைப்பட ரசனைக் குறிப்பு.
நம் சமூகம் என்ற
கூட்டுமனம் ஒரு வகை ஒழுங்கைக் கண்டடைந்திருக்கிறது. அந்த ஒழுங்காலான தளத்தில்தான் தன்
அனைத்துவகையான நிகழ்த்துதலையும் செய்துவருகிறது. இந்தக் கூட்டு மனதின் அடியில் கசிந்துகிடக்கும்
துயரமும்,எஞ்சிக்கிடக்கும் தோல்வியும்,விடுதலை உணர்வும்,தேசப்பற்றும்,குற்ற உணர்வும்
இதன் எல்லா வகையான இயக்கத்திலும் தாக்கம் செலுத்திவருவது இயல்பானதே அதை மீறும் மனோநிலைக்கு
நாம் இன்னமும் வரவில்லை.
நமதுமொழி கதைகளின்
கனத்தை வருந்திச் சுமக்கின்ற காலமிது. சொல்லிச்சொல்லி கனம்குறைக்க கதைசொல்லிகள் பலரை
ஈன்றபடியிருக்கிறாள் நம் மொழித்தாய். ஈரத்தில் நனைந்த எறும்புகள் ஊர்வதைப்போலத்தான்
நாம் கதைகளைக் கொண்டுவந்திருக்கிறோம். இறக்கிவைத்து இளைப்பாற ஒரு நாடு கிடைத்திருக்கிறது,அவகாசமும்
கிடைத்திருக்கிறது. கொண்டுவந்த கதைகளோடு வந்த இடக்கதைகளும் பின்னிக்கொள்கின்றன.
மொழி என்பதன் அடிப்படைக் குணம்
அசைதல்தான் அந்த அசைதலின் லாவகத்தை உணர்ந்தவர்களே கலைஞர்கள். அசைதல் ஓர் அனுபவம். கலையும்
அவ்வாறே.
‘துப்பாக்கியும்,கணையாழியும்’ திரைப்படத்தை
நான் ஒருமுறை மட்டுமே பார்த்தேன். ஒருமுறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் ஒன்றை
முன்வைப்பது எனக்கு கடினமாகவே இருக்கின்றது. ஆதலால் இது விமர்சனமல்ல ‘ரசனைக் குறிப்பு’
என்று கருதுக. பல விருதுகளையும்,பாராட்டுகளையும் பெற்ற படம் என்கின்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டே
அப்படத்தைப் பார்த்தேன். எனக்கு லெனின் எம் சிவத்தின் ஆற்றலில் இருந்த நம்பிக்கையும்
கூட இருந்தது என்றும் சொல்லலாம்.
மனிதர்களின் சுவைப்புத்திறனின்
அழகியமுன்னெடுப்பே ரசனை என்பதால் நீங்கள் கொஞ்சம் வாசிக்கக்கூடியதே எனது இந்தக்குறிப்பு.
எனக்குப் பிடித்தவற்றையும்,பிடிக்காதவற்றையும் பட்டியலிட்டுள்ளேன்.
1."jaffna town" என்ற பாடலோடு தொடங்குகிறது படம். நிலவு ஒரு பந்துபோல துள்ளிக்கொண்டிருக்க
பொருத்தமான இசை கவர்ச்சியாகவே இருந்தது.
2.விசாரணை செய்யும் ஒருவரின் தொப்பி போட்ட பிடரியை கமறா பார்த்துக்கொண்டிருக்க சிறப்புத்தேர்ச்சி மிக்க மூக்கைக்கொண்ட ஒரு சிறுவன் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய முகபாவமும், வியர்வையும்,கமறா நகர்ந்த விதமும் அருமையாக இருந்தது.
3.கதைக்குள் ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள் அவள் பின்னால் ரசிக மனமும் பயணித்துக்கொண்டிருந்தது. ஆனால் ரசிக மனம்காட்சியோடு ஒன்றிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. இப்படத்தில் இது போன்று ஒன்றிக்கப் போதுமான அவகாசம் கொடுக்கப்படாமை ஒரு பெலவீனமாகவே தெரிந்தது.
4.பியாணோவில் அமர்ந்திருந்த பாரதியின் மெளனத்தை படம் பிடித்திருந்த போதும் அந்த முகத்தில் கலவரம் இருந்தது அழகு.
5.ஆறு விதமான கதைக்கூறுகள் என்று நினைக்கிறேன். அவற்றைப் பின்னி ஒரு முடிவுக்கு வரும் ஆற்றல் பாராட்டத்தக்கதே. ஆனால் ஒரு கலைப்படைப்பு உருவாக்கவேண்டிய ஒட்டுமொத்த மன நிலைக்கு அப்பின்னல் தடையாகவே இருந்தது.
6.லெனினுக்கு துப்பறியும் கதைப்போக்கு கைதேர்ந்ததாய் இருக்கின்றது அப்போக்கினை சமூகத்தின் வெவ்வேறு தளக்கதைகளைச் சொல்ல வரும்போது ஒரு ‘புதுசு’ கிடைக்கின்றது அப்புதுசு நம் கலைப்போக்கிற்கு கட்டாயத் தேவையாகவே இருக்கின்றது. படம் முழுவதும் ‘டென்சனை’ தக்கவைத்தபடியே இருந்தது வெற்றியே.
7.மனைவியால் விட்டுச் செல்லப்பட்ட அந்தமனிதன் ‘உங்க ரெண்டுபேரையும் கொல்லாமல் விடமாட்டன்’ என்ற வசனத்தை வெளிப்படுத்திய விதத்தில் போதாமையை உணர்ந்தேன். அத்தோடு முக்கியமான பிரச்சினையாக இருந்தது ஆடைத்தெரிவுகளே.அந்த மனிதர் புது உடுப்புகளும்,புதுப் பாதணியுமாகவே படத்தில் தோன்றினார்.அது மட்டுமன்றி கெங்காதரன் கட்டியிருந்த சறமும் புதுசாகவே இருந்திருக்கலாம் போலும் புதுச்சறம் ரீசேட்டின் கீழால் நட்டுக்கொண்டு நின்றது,அவரும் பதுங்கிப்,பதுங்கி நடக்கும்போது கமறாவுக்கு பயந்த தனமும் தென்பட்டது. குறிப்பாக தன் வீட்டில் தேனீர் வைக்கும் காட்சி, வேலை செய்யும் இடத்தில் கையை வெட்டிவிட்டு வந்து வீட்டுப் படியால் ஏறும் காட்சி என்பவற்றைக் கூறலாம். ஆனால் கட்டிலில் அமர்ந்தபடி தடியில் கையூண்டி மூக்குக்கண்ணாடியுள்ளால் ‘இரும்பனாய்’ பார்த்த காட்சித்துண்டும்,அவர் குரலை ஆண்ட விதமும் நன்றாய் இருந்தது.
8.துப்பாக்கி வாங்குவதற்காக வந்த இடத்தில் ‘EXIT’ குறியீட்டின் அருகில்
உயரத்திலும், கம்பிவலையின் பின்னாலும், கமராவை வைத்திருந்ததும் கலை நயமாக இருந்தது.
படம் முடியும்போது கமரா மேலிருந்து பார்த்து மேல்நோக்கிப் பயணிப்பதும் சிறப்பாக இருந்தது.
9.முகத்தில் இரண்டு உண்ணியுள்ள நம் அழகிய கதாநாயகி அறிமுகமாகியவிதமும்,அவரின்
அபாரமான நடிப்புத்திறமையும், மதிவாசன்,சேகர்,சூடான் நாட்டவர், துப்பறியும் துறைசார்ந்த
அந்தக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டவர். போன்றோரின் பக்குவமான நடிப்புத்திறமையும்,
வசன அமைப்பும் படத்திற்கு வலுச்சேர்த்திருக்கின்றன.
10.கதாநாயகி பையைத்தூக்கிக்கொண்டு
புது இடத்தில் தங்கப் போனபோது அவள் முகத்திலிருந்த வியர்வையும்,வாழ்க்கைக்கான விடையை
விவிலியத்துக்குள் தேடிய விதமும் லெனின்சிவத்தின் ஆற்றலைச் சொல்லும் வெவ்வேறு இடங்களாக
இருந்தன.
11.எனக்குள்ளும் நிறபேதம்
வந்துபோனதை உணர்ந்து திகைத்த தருணம் அந்தச் சூடான் நாட்டு மனிதரோடு நாயகி சந்தித்தபோது ஏற்பட்டது. நான் அந்தக் கணத்தில்
வெட்கப்பட்டேன். அந்த மனிதர் விட்ட கண்ணீர் எனக்கு பாடம் புகட்டியது. நம் கதைகளை மற்றைய
சமூகத்தினருக்கு கொண்டோடிச் சொல்ல வேண்டும் என்று எண்ணும் நாம் இந்த பல்கலாச்சார நாட்டில்
வாழ்வதற்கான பக்குவம் பெறவேண்டியிருக்கின்றது என்பதையும் லெனின் நம் காதுகளில் சொல்லியிருக்கிறார்
அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.
12.சொந்தமண்ணில் பாதிக்கப்பட்டிருப்பவர்களின்
மன நிலையை புலம்பெயர்ந்தவர்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றும்,போராட்டத்துள்
இருந்த இயலாமை,சுயநலம் என்பவற்றைப் பேசுவதோடு. வன்முறையின் உறக்க நிலையையும் பேசுவதன்
மூலம் ஒரு சமூக விமர்சனத்தையும் இப்படம் முன்வைக்கின்றது.
13.இப்படத்தில் நதிக்கரையோரம்
நாயகி தன் கதையை சூடான் நாட்டு மனிதனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது நாமும் அவள்
உணர்வோடு பயணிக்கக் கூடியதாய் இருந்தது ஆனால் திடீரென்று ‘கட்’ பண்ணி வேறு கோணத்தில்
காட்டியபோது அது பெரும் தவறாகவே தெரிந்தது. அத்தோடு ‘லைற்றிங்’ யதார்த்தத் தனமற்று
மிகவும் மோசமாகவே இருந்தது. (குறிப்பாக பிள்ளையாருக்கான வெளிச்சம், கலர்க்கோர்வை வெளிச்சங்கள்) ஆடை வடிவமைப்பையும் கவனித்திருக்கலாம்.
14.ஓடிக்கொண்டிருக்கும்
ஆற்றுக்குள் விடையை காண்பது நல்ல முடிவு,அழகானதும்,அறிவுபூர்வமானதும் கூட. ஆனால் ரசிகர்கள்
பலர் செயற்கைத் தனமாகவும் இருப்பதாய் சொன்னார்கள். எனக்கு அந்த முடிவு பிடித்தே இருந்தது.
இந்தப் படத்தில் நான் பலவற்றை தவற விட்டிருக்கலாம்,என் பார்வைகளில்கூட
சில தவறுகள் இருக்கலாம் எனது வளர்ச்சிக்கும், துப்பாக்கியும்,மோதிரமும் படக்கலைஞர்களின்
வளர்ச்சிக்கும் இக்குறிப்பு ஒரு சிறு காரணியாகக்கூட அமையலாம் என்று கருதுவதால் இதனை
பிரசுரிக்கின்றேன்.
Comments